Hi Vickyalpha,
நீங்கள் கேட்டிருக்கும் "கேள்விக் கொத்துக்கள்" மிகவும் நியாயமானவைகள் !
நானும் மற்றவர்களைப் போல ஒரு சராசரி மனிதன்தான் . மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அளவிற்கு சித்தாந்தங்கள் , வழிகாட்டுதல்கள் எதுவும் என்னிடத்தில் இல்லை . ஆனால் வாழ்க்கையை குறித்த அழுத்தமான ஒரு சிந்தனை எனக்கு உண்டு . இது பற்றிய ஒரு சிறு விளக்கம்.....
------------------------------------------------------------------------------------------------------------------------
ஆன்மிக அடிப்படையில் , மனிதர்களை 3 வகையாக பிரிக்கவாம்.
1 . கடவுளை நம்புபவர்கள்.
இவர்கள் மற்றவர்களின் எண்ணங்களையும் , கூற்றுக்களையும் மற்றும் கருத்துக்களையும் சொல் மாறாமல் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் . வேதங்கள் , முன்னோர்கள் கூறிச்சென்ற கதைகள் மற்றும் சடங்குகளை முழுமையாக நம்புவார்கள் . கடவுள் என்ற கருத்தியலை இவர்கள் நம்பினாலும் , யார் கடவுள் என்றோ அல்லது உண்மையான கடவுள் யார் என்றோ கேள்வி எழும் சூழலில் , வரிந்து கட்டிக்கொண்டு , தான் நம்புவதுதான் சரி என்று வாதாடும் போராளிகளாக மாறி விடுவார்கள் . கடவுளுக்காக தங்கள் உயிரை விடக்கூட தயங்கமாட்டார்கள் . கடவுள்தான் அவர்களுககு எல்லாம்....
2 . கடவுளை நம்பாதவர்கள்.
இவர்கள் கருத்தியலில், 1ம் சாராருக்கு முற்றிலும் எதிரானவர்கள் . தங்கள் பகுத்தறிவை மட்டும் நம்புபவர்கள். தங்கள் எண்ணப்படி வாழ முற்படுபலர்கள் .
விஞ்ஞானத்தை முன்னிருத்தி தங்களுக்கு ஒரு வழிகாட்டுதலை ஏற்படுத்திக் கொள்வார்கள் . கடவுள் இல்லை அல்லது கடவுள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இவ்லை என்று கூறும் கடவுள் மறுப்பு சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிப்பார்கள் .
3 . கடவுள் சித்தாந்தத்தை
பொருட்படுத்தாதவர்கள்.
கடவுள் என்ற கருத்தியலாகட்டும் விஞ்ஞானம் என்ற வாழ்வியலாகட்டும் , அவைகளால் தமது வாழ்கைக்கு பயன் ஏதும் உண்டா என்பது பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் . 1ம் , 2ம் சாரார்களின் கருத்துக்களைக் கேட்பார்கள் , ஆனால் அவைகளில் பயனுள்ளவைகளை மட்டும் ஏற்பார்கள் . வாழும் வாழ்கை ஒரு முறை மட்டுமே என்று நம்பிக்கை கொண்டு அதனடிப்படையில் வாழ்க்கை நெறிதனை வகுத்துக்கொள்வார்கள் . பல ஆயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறம் கிரகமும் , மேக மண்டலங்களுக்கு அப்பால் வீற்றிருக்கும் கடவுளும் , இவர்களைப் பொறுத்தமட்டில் ஒன்றுதான் . அதாவது எட்டாக்கனி....அலட்டிக்கொள்ளமாட்டார்கள் . பயன் மற்றும் உண்மைத்தன்மை அடிப்படையில் விஞ்ஞானத்தையும் சரி கடவுளையும் சரி ஏற்றுக்கொள்ள தயங்கமாட்டார்கள் .
இதில் 3ம் இலக்கத்தினரை நோக்கி என் நகர்வு இருப்பதாக எனக்கு படுகிறது . மற்றபடி, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் தகுதி எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை .
நன்றி.