Living together என்பது கலாச்சாரம் பண்பாடு சார்ந்த விஷயம்.
இது , ஏற்கனவே இந்த மண்ணில் இருக்கும் கலாச்சார பண்புகளை, உதாரணமாக திருமண பந்தத்தை , அழிப்பதற்காக வந்து கொண்டிருக்கும் ஒரு மேற்கத்திய கலாச்சாரம்.
எனவே இதை இந்தக் கண்ணோட்டத்தில் அணுகுவதுதான் சிறந்தது.
திருமணம் செய்துகொண்டு வாழும் முறை என்பது நம்முடன் ஊறிப்போன ஒரு விஷயம்.
திருமண முறைமைகளை கால காலமாக நாம் கடைப்பிடித்து வரும் நமது பழக்கவழக்கங்களின் அடிப்படையிலேயே மேற்கொள்கிறோம். வேதாகமத்தின் பார்வையை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
காரணம்.....
நாகரீகம் வளராத , அறிவு முதிர்ச்சி பெறாத பழங்கால பாலைவன நாட்டு மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் பரிசுத்த வேதாகமத்தில் நமது கலாச்சாரத்திற்கான காரியங்களை தேடுவது சரியல்ல என்று நாம் நினைப்பதுதான்.
திருமணங்களில் கோட்சூட் மோதிரம் மாற்றுதல் போன்ற மேற்கத்திய கலாச்சாரங்களை பின்பற்றும் அதேவேளையில் தாலிகட்டுதல், மாலை, பட்டுப்புடவை ,மங்கள வாத்தியம் போன்றவற்றையும் நாம் விடுவதில்லை. சடங்கு சம்பிரதாயங்களை குறைவின்றி செய்கிறோம்
இது எதைக் காட்டுகிறது என்றால் , எங்கள் கலாச்சாரத்தை பின்பற்றுவோம். கிறிஸ்துவத்தை நமக்கு அறிமுகம் செய்த ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை கூட பின்பற்றுவோம் ஆனால் பாலஸ்தீன கலாசாரத்தை பின்பற்ற இயலாது என்று கூறுவதற்கு சமம்.
இதன் தொடர்ச்சியாக மேற்கத்திய கலாச்சாரத்தின் மேலும் ஒரு பரிமாணத்தை இப்பொழுது சந்திக்கின்றோம்.
எனவே திருமணம் மற்றும் living together ஆகியவைகள் கலாச்சாரம் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்க ளைச் சார்ந்ததாகவே கருதுவது நல்லது.
இதற்கு வெளியே இருப்பது விபச்சாரம் என்கின்றோம்
நமது கண்ணோட்டத்தில் விபச்சாரம் என்று நாம் கருதும் காரியத்தை செய்த தாவீதை , கடவுள் ஏற்றுக் கொண்டதாக அறிகிறோம்.
அவரே கூட தாவீதின் ஆண்டவருடைய ஸ்திரீகளை எடுத்து தாவீதின் மடியில் கொடுத்தார் என்றுகூட வாசிக்கிறோம்.
அவ்வளவு ஏன் ......ஒரு விபச்சாரியிடம் போய் சேரச் சொல்லி ஓசியா தீர்க்கதரிசியிடம் உரைத்ததையும் கூட வாசிக்கிறோம்.
தனது மன இச்சைகளின்படி பாவம் செய்தாலோ , அல்லது கடவுள் சொல்லி செய்தாலோ வேதத்தைப் பொறுத்த வரையில் அது ஒரு பொருட்டாக இருப்பதில்லை.
இங்குதான் பிரச்சனை எழுகிறது.
நாம் பாவம் என்று கருதும் காரியங்களை , வேதாகமமே பாவம் என்று அறிவுறுத்தும் காரியங்களைக்கூட , வேதாகமம் சீரியசாகவே எடுத்துக் கொள்வதில்லை .
இதை விசுவாசிகளிடம் நாம் சுட்டிக் காட்டும் பொழுது அவர்களும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை .
சர்வ சாதாரணமாக கடந்து சென்று விடுகிறார்கள்.
மேலும் ... வேதாகமம் இடறல் ஏற்படுத்தும் பல காரியங்களையும் உள்ளடக்கியுள்ளது.
கொலை செய்வது பாவம் என்று கூறிவிட்டு , மாடு முட்டினால் மாட்டுக்காரனையும் சேர்த்து கொலை செய்ய வேண்டும் என்று வேதாகமம் கூறும் போது இடறல் ஏற்படுகிறது.
மேற்சொன்ன பல காரணங்களினால் தான் வேதாகமத்தில் உள்ள கருத்துக்களை நேரிடையாக ஏற்க முடிவதில்லை. பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டியதாகிவிடுகிறது.
பகுத்தறிவை பயன்படுத்தினால் , கடவுளை முன்னிறுத்தாமல் சுயமாக செயல்படுவதாக குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.
காலப்போக்கில் , எல்லாவற்றுக்கும் வேதத்தை நாடாமல் , நம்மை அறியாமலேயே நாம் பகுத்தறிவு அடிப்படையில் காரியங்களை சீர்தூக்கி பார்த்து பின்பற்ற பழகிவிடுகிறோம். இது வேதாகமத்தை அசட்டை செய்வதாக ஆகாது.
மலைப்பிரசங்கம் போன்ற உன்னத காரியங்களை கூறுவதும் இதே வேதாகமம் தான்.
ஆகவே , கீழ்க்கண்ட வசனம்
எல்லா காலத்திற்கும் ஏற்றது எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருத்தமானது. எல்லா சந்தேகத்திற்கும் விடையளிப்பது.
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:21